கனடா செய்திகள்
ஜோர்ச்டவுன் பகுதியில் வீடொன்றில் தீப்பரவல் சந்தேக நபர் கைது
09/09/2019ஜோர்ச்டவுன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் , சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹல்ட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் ஜோர்ச்டவுன் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிரேஸ்டோன் கிறிசெண்டில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று முன் தினம் சந்தேகத்திற்கிடமான தீப்பரவல் ஏற்பட்டது.
எனினும், வீட்டில் இருந்த பெண் வீட்டின் முகப்பு ஜன்னல் பகுதியில் தீ பரவுவதைக் கண்டு, தீயணைப்பு படையினர் அங்கு செல்வதற்கு முன்னரே தீப்பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளார்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, குறித்த வீட்டுக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும், எனினும் இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என்றும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்தச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் உள்ள ஏனைய வீடுகளுக்கோ கட்டிடங்களுக்கோ அச்சுறுத்தல் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், ஹல்ட்டன் பிராந்திய பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.