கனடா செய்திகள்
கனடாவில் கடும் பனிப் புயல் சுமார் 30000 மரங்கள் சேதம்
10/17/2019கனடாவின் வின்னிபெக்கைத் தாக்கிய பனிப் புயலில் சிக்கி சுமார் 30,000 மரங்கள் சேதமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீதியோரங்களிலும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, கல்கரி பூங்கா ஊழியர்கள் வின்னிபெக்கிற்கு சென்றுள்ளனர். இந்த பணியில் நூற்றுக் கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த துப்பரவுப் பணிகள் நிறைவடைய ஒருமாத காலம் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர், வின்னிபெக்கில் இப்படியானதொரு மோசமான பனிப் புயல் சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் புரட்டியெடுத்த பனிப்புயல், மனிடோபாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மின்விநியோக தடையை ஏற்படுத்தியது. இதனால் அங்கு அவசரகால நிலையும் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.