கனடா செய்திகள்
வட கொரியா தென் கொரியா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து
09/19/2018வட மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனையடுத்து, அணுவாயுதக் களைவு தொடர்பில் இரு தரப்பும் இணங்கியுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வட கொரியாவிலுள்ள பிரதான ஏவுகணைத் தளமொன்றை மூடுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொரிய போர் காரணமாக பிரிந்துள்ள குடும்பத்தினரை மீள ஒன்றிணைப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்கள் இதன்போது திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், இராணுவப் பதற்றத்தைக் குறைப்பதற்கான மேலும் ஒரு ஒப்பந்தத்தில், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட கொரிய இராணுவத்தினர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பியோங்யாங்கிற்கு விஜயம் மேற்கொண்ட தென் கொரிய ஜனாதிபதி, கிம் ஜோங் உன்னைச் சந்தித்தார், இதனையடுத்து, பரந்தளவிலான குறித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.